சிங்கம் ஒன்று புறப்பட்டதே!!!!!!






சூலை 19, 2009, மலேசிய இந்தியர்களின் எழுச்சிக் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் திரு. உதயகுமார் அவர்கள் அதிமுக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யத் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றது.


சிறைவாசமும் தடுப்புக் காவல் நிலையங்களும் பல அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், அரசியல் சானக்கியர்களையும் உருவாக்கி இருப்பது சரித்திரம் உரைக்கும் உண்மை. 514 நாட்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் எனப்படும் மலேசிய அம்னோ ஆதிக்க அரசிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு ஒடுக்கு முறை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்குப் புறம்பான காட்டுமிராண்டி சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டவர் உதயகுமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் மனித உரிமைக்காகவே தன் வாழ்க்கையை தாரைவார்த்தவர். இதன் காரணமாகவே பல முறை கைது செய்யப்பட்டார் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும்.


இந்த நிகழ்வில் திரு. உதயா அவர்கள், மலேசிய மனித உரிமை கட்சியைத் தொடங்கும் அறிவிப்பைச் செய்யக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதோடு, அவர் தடுப்புக் காவலில் வதைக்கப்பட்டபோது வார்த்தெடுத்த நூல் ஒன்றையும் வெளியிடக்கூடும் என்றும் அறியப்படுகிறது.


மலேசிய இந்தியர்களுக்கென்று மேலும் ஒரு அரசியல் கட்சி தேவையா என்ற கேள்வியும் இங்கே எழக்கூடும். திரு. உதயாவின் இந்த அரசியல் கட்சிக்கு என் ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டேன். காரணம், மலேசிய இந்தியர்களுக்கென்று தொடங்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளும் அம்னோ/பாரிசானின் காலை நக்கி வாழும் கட்சிகளாகவே தங்களது பாதையை அமைத்துக் கொண்டுள்ளன. ஒரு டீசல் வண்டியை (நான் சாமி சத்தியமா சாமியை சொல்லலேங்கோ) வைத்துக் கொண்டு நமக்குள் விரிசல்களை ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் நுண்அரசியல் தந்த்திரத்தை இந்த அம்னோ அரசு வெற்றிகரமாக அரங்கேற்றி வருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்த நிகழ்ச்சிக்கு இந்தியர்கள் எல்லோரும் நடுநிலையோடு வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். திரு. உதயா அவர்களின் உரையை முழுமையாகக் கேட்டப் பின் நீங்களும் ஒரு முடிவுக்கு வரலாமே! சிந்திப்போம்; செயல்படுவோம். சரித்திர ஏடுகள் நம்மைச் சுமக்கக் காத்திருக்கின்றன. திரண்டு வாருங்கள்.


5:42 PM | Posted in ,
கடந்த இரண்டு மாதங்களாக அடைக்காக்கச் சென்றிருந்த இந்த மாடப்புறா இன்றிலிருந்து மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது (இதைச் சொல்வதற்கு வளவளவென்று நீண்ட பதிவையா எழுதனும்?).




தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வீர வித்தாக விதைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்போரளிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்ளவும், இலங்கை அரசின் இன அழிப்பைக் கண்டிக்கவும் நாளை 24-05-2009 காலை 10.00 - 1.00 மணிவரை பத்து மலையில் அலையென திரள்வோம். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணிந்து வாருங்கள்; குடும்பத்தோடு வாருங்கள்; நமது தார்மீக ஆதரவை போரில் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்கு காட்டும் பொருட்டு திரண்டு வாருங்கள்.

மலேசிய நாட்டு காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் கயவர்களால் கட்டவிழ்க்கப்பட்ட வதந்திகள் அதிகம் பரவலாம். இந்நாட்டு காவல்துறை என்றுதான் நடுநிலையாக நடந்து கொண்டிருக்கிறது? அச்சுறுத்தல்களை களைவது விடுத்து அச்சுறுத்தல்களை பரப்பிவிடுவதே கடந்த காலங்களில் அவர்களின் சாதனைகளாக நாம் பார்த்திருக்கிறோம். இம்முறையாவது வெந்த புண்ணில் வேலைப் பாச்சமாட்டார்கள் என நம்புவோம்.

வாருங்கள்; நம் உறவுகள் உடலறுந்து, உடை இழந்து, உணவிழந்து, உறக்கம் இழந்து தவிக்கின்றது. உங்களுக்கும் இது நேரலாம். அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளுங்கள்; ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்.


SUNDAY 24 MAY 2OO9 - BATU CAVES - TIME 10.00 AM TO 1.00 PM


மலேசிய எழுத்தாளர் திரு. சீ. அருண் அவர்கள் எழுதிய 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் அண்மையில் கிள்ளான் ஸ்ரீ சுந்ரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிள்ளான் செம்பருத்தி மாதிகை குழுவினரின் ஏற்பாட்டில் நடந்தேறிய இந்த நூல் வெளியீட்டில் ஏறக்குறைய 250 தமிழ் ஆர்வளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்களின் தலைமை ஏற்று சிறப்பித்தார். டான் ஸ்ரீ குமரன், உயர்திரு முத்தையா, உயர்திரு கலைமணி, செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம், மலேசியா இன்று வலைப்பதிவாசிரியர் உயர்திரு. ஜி.பி. காத்தையா, கிள்ளான் செம்பருத்தி வாசகர் வட்டத் தலைவர் திரு. கோவிந்தராசு, கவிஞர் பொன்.நாவலன், கவிஞர் பங்சார் அண்ணாமலை, எழுத்தாளர் திரு. ந.வரதராசு, கிள்ளான் ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் ஆகிய வட்டார பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணிக்கே தொடங்கிற்று. திரு. கோவிந்தராசு வரவேற்புரை வழங்கினார். கவிஞர் பொன்.நாவலன் அவர்களும் கவிஞர் பங்சார் அண்ணாமலை அவர்களும் கவிதை விருந்து படைத்தனர்.

முதல் சிறப்புரையாக ஐயா காத்தையா அவர்களின் உரை அமைந்தது. ஐயா அவர்களின் பதிவுகள் எவ்வளவு சூடாக இருக்குமோ அது போலவே அவரது உரையும் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை தமது ஆவேசப் பேச்சினால் சிந்திக்கவும் செய்தார். மலேசிய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்களின் அளப்பரிய பங்கு நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டும்; மறக்கப்பட்டும்; மறைக்கப்பட்டும் வருகின்றது. இதற்கு இந்த நாட்டில் இதுவரை எந்த குறிப்பிடும்படியான நிகழ்வுகளையும் நாம் ஆவணப்படுத்தி வைக்காததுவே காரணம் என்றார். இந்நாடு நமது சரித்திரத்தையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நாளைய தலைமுறையினருக்குத் தவறான, நம்மை மாசுபடுத்தும், சிறுமைபடுத்தும் செய்திகளே தகவல் சாதனங்கள் மூலமும் கல்வி திட்டத்தின் மூலமும் ஊட்டிவிடப்படும் என்று தனது ஆதங்கங்களை முன்வைத்துப் பேசினார்.

இரண்டாவது சிறப்புரையை புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு முத்தையா வழங்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீ சுந்தரராச பெருமாள் ஆலயத் தலைவர் திரு. சி.த. ஆனந்தகிருட்ணன் அவர்கள், ஆலயங்கள் இறை காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருக்காமல் மக்கள் ஒன்றுகூடும் இடங்களாக மாறவேண்டும் என்றார். அண்மைய காலமாக இந்த ஆலயத்தில் பல நூல் வெளியீடுகள் நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது செம்பருத்தி மாதிகையின் ஆசிரியர் உயர்திரு க.ஆறுமுகம் அவர்களின் சிறப்புரை. அவரது உரையில் இடம் பெற்ற ஒரு கருத்தை மட்டும் இங்கே முன்வைக்கிறேன். 1786 ஆம் ஆண்டு முதல் 1957 ஆண்டுவரை அன்றைய மலாயாவிற்கு வந்த மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 42 இலட்சம். பல சூழ்நிலைகளின் காரணமாக மீண்டும் இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 30 இலட்சம். 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 8 இலட்சமே இருந்திருக்கின்றது. ஆனால், இதில் 62 விழுக்காட்டினர் (ஏறக்குறைய 3 இலட்சம்) மலாயா மண்ணில் பிறந்தவர்கள். அப்படி என்றால், இந்தியாவிற்குத் திரும்பாமல் மலாயாவிலே தங்கிய 12 இலட்சத்தில் 1957 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது உயிரோடு இருந்தவர்கள் 5 இலட்சம் மட்டுமே. மீதமுள்ள 8 இலட்சம் மூதாதையர்களை இந்த மண்ணில் புதைத்து இன்றைய மலேசியாவை வார்த்தெடுத்திருக்கின்றோம் என்ற மிகப் பெரிய உண்மையைக் கூறிய போது வருகையாளர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள். இந்த மாபெரும் உயிர் இழப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாய ஒன்றுதான் இந்த பர்மா-சயாம் மரண இருப்புப்பாதை கட்டுமானப்பணி என்று நீண்ட விரிந்த உரையை வழங்கி சபையோரை சிந்திக்கும்படி செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து உயர்திரு கலைமணி அவர்கள் நூல் ஆய்வினை செய்தார். வரலாற்று தவறுகள் அல்லது பிழைகள் தொடராமல் இருக்க அவரவர் வாழ்க்கையை ஆவணப்படுத்துமாறு தமது நூல் ஆய்வின் ஊடே கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாக தலைமை இயக்குனர் திரு. ஓம்ஸ். தியாகராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றி நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இறுதியில் நூலின் ஆசிரியர் திரு. அருண் அவர்கள் ஏற்புரை வழங்கினார். இந்த நூலானது ஐந்தாண்டுகால கடும் உழைப்பின் பயன் என்றும் தெரிவித்தார். இந்த நூல் உதயமாக தன்னோடு மற்றும் பலரின் உழப்பும் பங்கும் இருக்கின்றது என்பதை தெரிவித்து நிகழ்வுக்கு விடை கொடுத்தார்.


'சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்ற நூல் வெளியீடு மாலை 7.00 மணியளவில் கடும் மழையின் கண்ணீர்த் துளிகளோடு நிறைவுற்றது.




என் பார்வையில்...


குறித்த நேரத்தைவிட்டு தாமதமாக நிகழ்வுகளைத் துவங்குவது இன்றைய நமது கலாச்சாரத்தோடு இணைந்துவிட்ட மறபாகிவிட்டது. பொது மக்கள் வந்து காத்திருந்தாலும் நேரத்தோடு கூட்டத்திற்கு வரும் தலைவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். மக்களின் வருகைக்கு காத்திருப்பதை விடுத்து இன்றைய நிலையில் தலைவர்களுக்கே அதிகம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வந்தவுடன்தான் நிகழ்ச்சியைத் தொடக்க வேண்டும் என்ற வேதாந்தத்தை மாற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.



இந்த நூல் வெளியீட்டுக்கு சிறப்பு வருகையாளர்கள் என்று சில தலைவர்களின் நிழற்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றைக் கண்டேன். அதில் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகு, மாண்புமிகு மாணிக்கவாசகம், மாண்புமிகு ரோனி லியூ, மாண்புமிகு மானோகரன், மாண்புமிகு Dr. சேவியர் ஜெயக்குமார் ஆகியோரின் நிழற்படங்களும் கண்களில் பட்டது. இந்த மாண்புமிகுகளின் அனுமதி பெற்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரே இந்த பதாகை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஒருவர்கூட வராதது நூலின் ஆசிரியருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கக்கூடும். வருகையாளர்கள் மத்தியில் அவர்களின் செய்கை வருத்தத்தை தந்தது மட்டுமின்றி சினமடையவும் செய்ததாகவே உணர்ந்தேன். கல்வி தொடர்புடைய, தன் சொந்த சமுதாயம் கடந்து வந்த சூழல்களை எடுத்துக்கூறும் ஒரு சரித்திர நூலினை மதிக்கும் மாண்பை இழந்தவர்களைத்தானா மாண்புமிகுக்கள் என்று புகழ்பாடுகிறோம்? இவர்களில் மாண்புமிகு மாணிக்கவாசகம் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு என்று கேள்விப்பட்டேன். மற்றவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தலும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் தலைமைத்துவ பண்புகளில் ஒரு பகுதிதானே!

விளையும் பயிர் முளையும் போதே தெரியுமாம். இதுபோன்ற தலைவர்களுக்கு சுட்டிக்காட்டி முட்டுக் கொடுத்து வளரும் போதே சரி செய்துவிட வேண்டும். தவறாக வளர்ந்து விருட்சமாகிவிட்டால் அகற்றுவது எவ்வளவு சிரமம் என்று மலேசிய இந்தியர்களுக்கு கடந்த 30 ஆண்டுகள் கொடுத்த அனுபவப் பாடம் ஒன்றே போதுமானது.

சிறந்த சமுதாயம் செய்யும் கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. நிகழ்கால சீறிய + தூரநோக்கு சிந்தனையே நாளைய சிறந்த சமுதாய உருவாக்கத்திற்கு வித்தாகும்.


சிந்திப்போம்! செயல்படுவோம்!







பி.கு : நிழற்படங்கள் தரம் குறைந்திருப்பதற்கும் சற்று தாமதமாக நூல் வெளியீட்டுச் செய்திகளை பதிவேற்றியதற்கும்.... மன்னிப்பு கோருகிறேன்.




பகுதி 2


3. வாழ்விடம்


அட்டைகள் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன. ஆயினும், அவை சூரிய ஒளியை நேசிப்பதில்லை. நேரடி சூரிய ஒளிக்கதிர்கள் மேனியைத் தழுவாதிருக்கும் பொருட்டு கற்கள், பாறை இடுக்குகள், செடி கொடிகள், வேர்கள் என்று மறைவிடத்தை நாடி வாழ்கின்றன. சுறுங்கச் சொன்னால், அட்டைகள் வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த இடங்களில் வாழக்கூடியன.



பொதுவாக, வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த நீர் பகுதிகளில் அட்டைகள் அதிகம் காணப்படும். அட்டைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டன. எனினும், தேங்கி இருக்கும் நீரே அட்டைகளுக்கு உகந்ததாகும். காரணம் ஓடும் நீரில் எதிர்நீச்சல் போடும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஆழமான நீர்நிலைகளிலும் அட்டைகள் வசிப்பதில்லை. காரணம் தேங்கி இருக்கும் நீரின் மேற்பகுதியில் மட்டுமே சுவாசத்திற்குத் தேவையான பிராணவாயு அதிகம் இருக்கும். குளோரின் அதிகம் கொண்ட நீரிலும் அட்டைகள் வாழாது. நீருக்கு வெளியே வரும் அட்டைகள், தன் உடலின் தோல் பரப்பில் உள்ள சுவாசத் துவாரங்களின் துணைகொண்டு சுவாசிக்கின்றன.


அட்டைகள் சத்தம் கொண்ட சூழ்நிலையை வெறுக்கின்றன. அதிக சத்தம் அட்டைகளின் இனப் பெருக்கத்திற்கும் தடையாக அமையும்.



ஆக மொத்தத்தில், உண்பதையும் இனபெருக்கம் செய்வதையுமே வேலையாகக் கொண்டு பிற உயிர்களை அண்டி வாழும் அட்டைகள் மட்டுமல்ல அவ்வாறான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த மனிதர்களும் கூனிக் குறுகி, மறைந்து ஒளிந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாயிருக்கும்.



4. உணவு




அட்டைகளின் முக்கிய உணவு உயிரினங்களின் குருதியே. ஒரு சில நீர் தாவரங்களின் இலைகளையும் அவ்வப்போது உண்ணும் பழக்கம் அட்டைகளுக்கு உண்டு.



உயிரினங்களில் மேலான உயிரினம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதன் உமிழ்நீரைத் துப்பினால் உலகப் போரே வெடித்துவிடும். ஆனால், அற்பமாகக் கருதும் அட்டையின் உமிழ்நீருக்கு இன்று மருத்துவ உலகமே சிவப்பு கம்பளம் விரிக்கின்றது.



அட்டைகளுக்கு மூன்று பல் தொகுதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் நூறு சிறு பற்கள் வீதம் மொத்தம் முன்னூறு பற்கள் இருக்கின்றன. அட்டைகள் இந்தப் பற்களின் துணை கொண்டு மற்ற உயிரினங்களின் தோல் பகுதியை முதலில் கடித்து துவாரமிடுகின்றன. பின்னர், தேக்கி வைத்திருக்கும் உமிழ்நீரை துப்புகின்றன. உமிழ்நீரில் கலந்திருக்கும் Hirudin எனும் Enzime குருதியை எளிதாக உறிவதற்கு ஏற்றவரையில் மேலும் இலகுவாக்குகின்றது.



ஏறக்குறைய 10 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை அவை உணவருந்தும். தான் உறிந்த குருதியின் கணம் தாங்காமல் பற்களை விடுவித்துக் கொண்டு அவை கீழே விழுந்துவிடுகின்றன. ஒரு முறை வயிறுமுட்ட குருதியை உறிஞ்சிய அட்டைக்கு அடுத்த ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை உணவுத் தேவை இருக்காது.


அட்டை வளர்ப்பை தொழிலாகச் செய்ய நினைப்பவர்கள், விலாங்கு மீனையும் மயிரை மீனையும் அட்டைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். காரணம், இவ்விரண்டு வகை மீன்களுக்கும் செதில் இல்லை; எளிதில் கிடைக்கக்கூடியது; செலவுகள் குறைவு. உயிரோடு இருக்கின்ற மீன்களை வாங்கி கம்பிக் கூண்டிலிட்டு அட்டை தொட்டிகளில் வைக்கலாம். மீன்கள் வைக்கப்படும் இந்த கம்பிக் கூண்டுகள் சரிபாதி மட்டுமே நீரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மீன்களின் உடலில் இருக்கும் குருதி உறிஞ்சப்பட்டுவிட்டால், மீன்களின் உடல் வெளுத்து காணப்படும். குருதி வெளியாக்கப்பட்ட மீன்கள் இறப்பதற்கு முன்னதாக அப்புறப்படுத்தப்பட வெண்டும்.





5. வளர்ப்பு தொட்டிகள்





அட்டைகளை மூன்று வழிமுறைகளில் வளர்க்கலாம்.





1). நீர் தேக்கங்கள்/குளங்கள் - இந்த முறை பெரிய பொருட்செலவில் அதிக எண்ணிக்கையில் (பல ஆயிரம்) அட்டைகளை வளர்ப்பதாகும்.








2). சிமெண்ட் தொட்டிகள் - இந்த முறை குறைந்த பொருட்செலவில் சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். இந்த சிமெண்ட் தொட்டிகள், வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் வராத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். சொந்த அல்லது வாடகை நிலங்களில் இந்த முறையை பயன்படுத்தலாம்.







3). நீர் தொட்டிகள் - இந்த முறை மிகக் குறைந்த பொருட்செலவில் சில நூறிலிருந்து சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். நமது வீடுகளில் நீரை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் அதே கருப்பு நிறம் கொண்ட Poly Tank தான் இந்த தொட்டிகள். ஒவ்வொரு தொட்டிகளிலும் 500-லிருந்து 700 அட்டைகள் வரை வளர்க்கலாம். இது மிகவும் எளிய முறையாதலால் சிறு தொழிலாக அட்டை வளர்ப்பை தொடங்குகின்றவர்களில் பெரும்பான்மையினர் இம்முறையையே பயன்படுத்துகின்றனர். வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் 'உல்லாச உலா' செல்லாதவாறு இந்தத் தொட்டிகளின் மேற்பகுதியில் சல்லடைக் கம்பிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.






தொடரும்....


பி. கு: தயவு கூர்ந்து Enzime, சிமெண்ட், Poly Tank ஆகியவற்றுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.



பகுதி 3


6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து






ஈழ மண்ணில் சிங்கள அரசு அரங்கேற்றிவரும் தமிழ் இன ஒழிப்பு படுகொலைகளைக் கண்டித்து நேற்று கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ஐ.நா சபையின் அலுவளகத்தின் முன் கண்டிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

'அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டுமென' உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் திரு.பசுபதி அவர்கள் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்து அன்பு வேண்டுகோளும் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள் என்று பாராது மூர்க்கத்தனமாக தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்களின் மன வேதனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுகாரும் ஐக்கிய நாடுகளின் சபையின் போக்கு செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே இருக்கின்றது. கொசோவோ, காசா, கிழக்குத் தீமோர் போன்ற இடங்களில் காட்டிய அக்கறையில் ஒரு விழுக்காடுகூட இலங்கைத் தமிழர்கள்பால் காட்டத்தவறியிருக்கும் ஐ.நா சபையின் வக்கற்ற நிலைகுறித்து கூட்டத்திற்கு வந்திருந்த மலேசியத் தமிழர்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்தனர்.


கண்டனக் குரல் எழுப்ப பெரும் திரளாக தமிழர்கள் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தனர். மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக 'பேரணி' தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சேர்க்கப்பட்டன. ஆயினும், இந்த கண்டனக் கூட்டத்திற்கு அரசு சார்பற்ற இயக்கங்களிலிருந்தும், அரசியல் கட்சிகளிலிருந்தும், இயக்கங்களைச் சாராத 500க்கும் அதிகமான தமிழ் நெஞ்சங்களே வந்திருந்தது மனதிற்குச் சற்று வருத்தத்தைத் தந்தது. மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் மலேசிய இந்தியர் காங்கிரசிலிருந்து (MIC) ஒருவர்கூட வரவில்லையா என்ற கேள்விக்குறியும் எழும்பவே செய்தது. காரணம், குறை குடங்கள் தழும்பும் என்பதைப் போல், அக்கட்சியைச் சார்ந்த ஒரு சிலரே இது போன்ற நிகழ்வுகளுக்கு வந்தாலும் வானத்துக்கும் மண்ணுக்கும் குதித்து இவர்கள் போடும் கூப்பாடு மற்றவர்களை இவர்கள்பால் சுளித்த முகத்தோடு திரும்பிப் பார்க்க வைக்கும். அவ்வாறு ஏதும் நேற்று நடக்கவில்லை. பொதுவாக அரசியல் ஆதாயம் இருந்தால் மட்டுமே இவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகின்றது. தமிழன் என்ற உணர்வே இல்லாத இவர்கள்தானா (ஆளும் பாரிசான் அரசாங்கத்திலிருக்கும் அனைத்து இந்தியர் கட்சிகளும்) நம் நாட்டுத் தமிழர்களுக் குரல் கொடுக்கப் போகின்றார்கள்?

திரு.சி. பசுபதி அவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். மாணிக்கவாசகம், ம.மனோகரன், சார்ல்ஸ் சந்தியாகு ஆகியோரும் இக்கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 2.30 மணியளவில் இலங்கையில் நடக்கும் போர் வன்முறைகளைக் கண்டித்தும், ஐ.நா சபையின் ஒருதலைப் பட்ச செயல்முறையைக் கண்டித்தும், ஐ.நாவில் இலங்கை தொடர்பான உடனடி விவாதம் நடத்தப்பட வேண்டும்; அரசியல் நிலைத்தன்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய ஆட்சேப மனு மலேசியாவுக்கான ஐ.நா பிரதிநிதியிடம் கொடுக்கப்பட்டது.

இது போன்ற கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் மக்கள் பகிரங்க ஆதரவு வழங்க வேண்டும். வராமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கத் தெரிந்த இவர்களது சிந்தைக்கு, வருவதற்கு சில காரணங்கள்கூடவா கிடைப்பதில்லை?; மனம் வெம்புகின்றது. மலேசியாவில் இப்போது நாம் முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.





மு.கு : இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளாக பதிவேற்றப்படும்.


பகுதி 1

1. பொது

இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு வாந்தி வருவதைப்போல் தோன்றும்; வேறு சிலருக்கு உடம்பில் மயிர் சிலிர்த்து நிற்கும் காரணம் அதன் அருவறுப்புமிக்கத் தோற்றம்தான்; மற்றும் சிலரின் சிந்தனையில் இந்த அர்ப்ப உயிரினத்தையும் பணமாக்க முடியுமா என்ற கேள்வியும் மூளையைத் துளைத்துக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே அட்டையின் நன்மைகளும் அதன் பொருளாதார வலிமையும் இந்நேரம் புரிந்திருக்கும்.

மலேசியாவில் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டு காலமாக பயனற்றுக்கிடந்த அட்டைகளுக்கு எழுந்த மதிப்பு சொல்லில் அடங்காது. வார இறுதியில் நாளிதழ்களைத் திறந்தால் நிச்சயம் அட்டை வளர்ப்புப் பயிற்சிகளைப் பற்றியத் தகவல்களும் விளம்பரங்களும் தவறாது இடம்பெறுவதைக் காணலாம். அப்பயிற்சிகளில் கொடுக்கப்படும் அட்டை வளர்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வதும், அட்டை வளர்ப்பை சுயதொழிலாகச் செய்ய முன்வரும் இளைஞர்களுக்குச் சிறிய அளவிலான அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துத் தரும் களமாகவும் இந்தக் கட்டுரை அமைந்திருக்கும்.


2. அட்டை - பொதுவான தகவல்கள்

அட்டைகள் மற்ற உயிரினங்களின்பால் அண்டி அதன் குருதியை உறிந்து வாழும் ஓர் உயிரினம். நையப் புடைக்க உறிந்து களித்தப்பின் தனது இனப்பெருக்கத்தில் தீவிரம் காட்டுவதுதான் அட்டைகளின் இயல்பு.

உலகில் மொத்தம் 650 வகை அட்டைகள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை அளவிலும், தோற்றத்திலும் மாறுபட்டிருக்கும். மலேசியாவில் பல வகை அட்டைகள் காணப்பட்டாலும் இரண்டு வகை அட்டைகள் மட்டுமே பெருமளவில் வணிப நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன. அவை European
Medicinal Leech (Hirudinaria Manliness) - Green and Brown. பச்சை நிறத்திலான அட்டைகள் நதியோரங்களிலும் குளத்தோரங்களிலும் வழக்கமாகக் காணப்படுகின்றன. சாக்லெட் நிறத்திலான அட்டைகளை வழக்கமாக வயல்வெளிகளிலே காணலாம். வழக்கு மொழியில் நாம் இதனை மாட்டு அட்டைகள் என்று அழைக்கிறோம்.

அட்டைகள் மெலிந்து சிறியதாக இருந்தாலும், ஓர் புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குத் தாண்டும் போது அதன் உடல் நீண்டு விரிந்து (elastic) கொடுக்கிறது (2 மடங்கு).

அட்டைகளுக்கு கண்கள் கிடையாது. அதனால்தானோ என்னவோ, அது நல்லவன் கெட்டவன் என்று பார்ப்பதே இல்லை.

அட்டைகள் கூடிய வரை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வாழக்கூடியன. ஒவ்வொரு அட்டையும் தனது வாழும் காலத்தில் சராசரி 30-லிருந்து 300 முட்டைகள் வரை இடும். ஒவ்வொரு அட்டையும் முட்டை இடும் தன்மை கொண்டது. ....புரிகிறது.. ஆண் அட்டையும் முட்டை இடுமா என்று யோசிக்கின்றீர்களா? ஒவ்வொரு அட்டையும் இருபால் உறுப்புகள் கொண்டவை. அவையே ஆணாகவும் பெண்ணாகவும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்.


தொடரும்....

பி. கு:
தயவு கூர்ந்து சாக்லெட் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.

பகுதி 2
3. வாழ்விடம்
4. உணவு
5.வளர்ப்புத் தொட்டிகள்

பகுதி 3
6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து


நூல் வெளியீடு


நூல்: சயாம்-பர்மா மரண இரயில்பாதை-மீட்க்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு


ஆசிரியர்: சீ. அருண் (கிள்ளான்)
கைபேசி :012 3002911


நூல் வெளியிடப்படும் இடங்கள்


இடம் :நெகிரி மாநில ம.இ.கா மண்டபம்
நாள் : 22-02-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.00


இடம் :கோலாசிலாங்கூர் ஆலய மண்டபம்
நாள் : 01-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இடம் :கிள்ளான் சுந்தரராச பெருமாள் ஆலய மண்டபம்
நாள் : 15-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இந்த நூல் தூசு அண்டிக்கிடக்கும் ஒரு பாவப்பட்ட சரித்திரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு தட்டி, சுத்தம் செய்து, தமிழர்கள் பட்ட இன்னல்களை உலகத்துக்கு எடுத்துரைக்கும் நூலாகக் கருதப்படுகிறது.


உலகிலேயே மிகவும் மோசமான தொடர்வண்டி தண்டவாளம் என்றால் அது நிச்சயமாக 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'யாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்ட இத்தண்டவாளம், 15 மாதங்களிலே பயங்கர காடுகளை அழித்து, மலைகளைக் குடைந்து பூர்த்தி செய்யப்பட்டது.


நவீன இயந்திரங்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத அக்காலக்கட்டத்தில் குறித்த காலத்துக்கு முன்னதாகவே வேலைகள் முடிக்கப்பட்டது பெருமைதான். ஆனால், இந்த தண்டவாளத் திட்டம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை மடிந்த மனித உயிர்கள்தான் எத்தனை? எத்தனை? சிதைந்த குடும்பங்கள்தான் எத்தனை? எத்தனை?


நம் மலேசியத் தமிழர்களுக்கும் இந்த 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'க்கும் அணுக்கமான தொடர்பு உள்ளது. மலேசியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் தமிழர்களே. அவர்களின் கதைகளை நம் பெற்றோர்கள் வாயிலாகவும் உயிரோடு திரும்பிவந்த சில தாத்தா-பாட்டிகள் வாயிலாகவும் கேட்டிருக்கிறோம். ஆனால், நாளைய தலைமுறைக்கு இவையாவும் கதைகளாகவே போய்விடும்.


சரித்திர நிகழ்வுகளையும் சான்றுகளையும் ஆவணப்படுத்தாமையால் தமிழர்கள் இழந்தது பல. காலங்கடந்து வரலாற்றுச் சான்றுகளைத் தேடிப்பிடிப்பது மிகவும் சிக்கல் நிறைந்த வேலை. பல காலம் செய்த ஆய்வின் வழி, தேடி எடுத்த சான்றுகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி பாராட்டுக்குறியது; போற்றத்தக்கது.


எழுத்தாளர்களுக்கு ஊக்க மருந்தே நூல் விற்பனைதான். இதுபோன்ற சிறந்த நூல்கள் மேலும் வெளிவர வேண்டுமானால் வாசகர்கள்தான் தோல் கொடுக்க வேண்டும்.
21-ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர் இன ஒழிப்புக்கும் துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் நேற்று (06-02-2009) கோலாலம்பூரில் இந்திய தூதரகத்தின் முன் கண்டனப் பேரணி நடைபெற்றது. பயிரைக் காக்க வேண்டிய இந்திய அரசே, தினம் தினம் கொத்துக் கொத்தாக மடியும் தமிழர்களின் குருதியை குடிக்கும் டிரக்குலா பேயாக/அனக்கோண்டாவாக மாறிய ஈனச் செயலைக் கண்டிக்கும் ஆட்சேப மனு ஒன்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. காலை 11.00 மணி தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடித்த இக்கண்டனப் பேரணியில் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.





இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் நேடிப் பார்வைக்கு கொண்டு செல்லப்படுமென இந்தியத் தூதர் அசோக் கந்தா அவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ள அம்மனுவில் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை:

1. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களை கொன்றொழிக்கும் இலங்கை சிங்கள அரசின் அடாவடிதனத்தை இந்தியா தலையிட்டு நிறுத்தவேண்டும்.

2. போரிடும் தரப்புக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

3. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு அல்லது புணரமைப்புக்கான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்துத்தரப்பட வேண்டும்.

4. ஈழத்தமிழர் நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.


பல இடைபாடுகளுக்கிடையே இந்த எதிர்ப்பு பேரணியை குளோபல் பீஸ் இனிசியேட்டிவ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது குறிபிடத்தக்கது. பினாங்கு துணை முதலமைச்சர் மாண்புமிகு ராமசாமி அவர்கள் இப்பேரணிக்குத் தலைமை தாங்கினார். குளோபல் பீஸ் இனிசியேட்டிவ் அமைப்பின் தலைவர் சி. பசுபதி அவர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோபிந்த் சிங் டியோ, எஸ். மாணிக்கவாசகம், ம.மனோகரன், நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்தியத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட இந்த எதிர்ப்புக் கூட்டத்திற்கு சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம், மலேசிய சோசலிசக் கட்சி பொதுச்செயலாளர் அருள்செல்வன், மலேசிய திராவிடக் கட்சியின் தலைவர் ரேசு. முத்தையா, இண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் டி. தனேந்திரன், மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் கா. உதய சூரியன் போன்றோர் இலங்கையில் நம் தமிழ் உறவுகள் அழிக்கப்படுவதை தாழாது வந்திருந்த கூட்டத்தினரிடையே காணப்பட்டனர். எந்தக் கட்சிக் கொடியும் ஏந்திவராத கூட்டத்தோரிடையே ம.இ.கா இளைஞர் பகுதியினர் சுமார் 100 பேர் தங்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட பாதகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“India, what are you waiting for?”, “India, to protect your interests in Sri Lanka, Don’t Allow Sri Lankan Racist to kill the Tamils!”, "இந்திய அரசே, ஈழத்தமிழர்களைக் கொல்ல துணை போகாதே" என்று பொறிக்கப்பட்ட பதாகைகள் ஏறாளமாகக் காணப்பட்டன. "தமிழினத் துரோகிகள்" என்று பொறிக்கப்பட்ட பதாகையில் பிரதமர் மன் மோகன் சிங், சோனியா காந்தி, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் காணப்பட்டது. இந்தப் பதாகையை பார்ப்பவர்களெல்லாம் தங்கள் காலணிகளை கொண்டு ஆராதனை செய்த காட்சியை சிறு வரிகளில் அடக்கிவிட முடியாது.

மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் போர் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டுகோள் முன்வைக்கப்படுமென மான்புமிகு கோபின் சிங் தெரிவித்தார். அப்போது அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர், "இந்த நாட்டு அரசாங்கத்தார் பாலசுதீனத்தில் ஒருவர் இருவர் கொல்லப்பட்டால் உடனே நாடாளுமன்றத்தில் கூக்குரலிட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆனால், தினமும் 60-70 அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் குடிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் போட கோரிக்கையை முன்வைக்க வேண்டியிருக்கிறது. வேடிக்கையாயிருக்கைய்யா நம்ம நாட்டு மனித உரிமை கொள்கை" என்று தனது வயிற்றெரிச்சலை கொட்டிச் சென்றார்.

இந்தக் கண்டனப் பேரணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முப்பதுக்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களோடு, 10 கலகத் 'தொடுப்பு' (FRU) காவலர்களும் காணப்பட்டனர் (வழக்கமாக வண்டி வண்டியாக வந்திறங்குபவர்கள், வண்டி கட்டிக் கொண்டு ஈப்போ மாநகரை நோக்கி நீர் பாச்சச் சென்றிருப்பதாகக் கேள்வி !)

சொல்லடி சிவசக்தி


தமிழின் காவலன், தமிழரின் தலைவன் என்ற அடைமொழிகளை ஏந்தி நிற்கும் தகுதி இனி கலைஞர் கருணாநிதிக்கு இல்லை. கலைஞர் நீலிக்கண்ணீர் வடிப்பது உலகத் தமிழர் அனைவருக்கும் தெளிவாகிவிட்டது. பதவி, பணம் என்ற இரண்டு பிசாசுகளே கலைஞருக்கு இரு கண்கள் என்பதை தமிழ் ஈழம் தொடர்பான அவரது அண்மைய உரைகள் மெய்ப்பித்துவிட்டன.

ஈழ வரலாற்றை, விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட்ட வரலாற்றை "புளித்து போய்விட்டது" என்று தனது கறைபடிந்த சிந்தனையால் உதிர்த்தது வேதனைத் தருகிறது. சமகால வரலாற்றை விளங்கிக் கொள்ளத் தவறிய கலைஞரா என்றோ வாழ்ந்த மனோகராவையும் கண்ணகியையும் சரியாக செதுக்கியிருக்கப் போகிறார்?

தமிழ் ஈழம் என்ற தனிநாடு உருவாகிவிட்டால் தனக்கு இதுவரை உலகத் தமிழர்கள் வழங்கிய சிறப்பும் மதிப்பும் குன்றிவிடும்; 'உலகத் தமிழர் தலைவர்' என்ற மகுடம் சரிந்துவிடும்; பிரபாகரனிடம் எல்லாவற்றையும் பரிகொடுத்துவிடுவோம் என்ற எண்ணத்தில் இன்று அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு படை கொண்டு அழிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு இந்திய அரசு நல்கிவரும் இராணுவ உதவிகளையும் கண்டும் காணாததுபோல் பாசாங்கு செய்கிறார்.

இதே நிலைதான் மலேசிய மண்ணிலும். இந்தப் பேரணிக்கு அரசு சார்பற்ற அமைப்புதான் (NGO) ஏற்பாடு செய்திருந்தது. மலேசியாவில் உள்ள எதிர்கட்சிகளைச் சேர்ந்த இந்திய பிரதிநிதிகள் அதிகமாக வந்து தங்களது ஆதரவை புலப்படுத்திக் கொண்டனர். ஆனால், ஆளும் பாரிசான் அரசங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்தியர் கட்சிகளிலிருந்து ஒரு தமிழ் மான்புமிகுவையும் காண்முடியவில்லை. இவர்களுக்கெல்லாம் மனம் பாறையாகிவிட்டதா? இவர்களும் மனிதர்கள்தானா? இந்தத் தரங்கெட்ட மனிதரை தமிழராய் படைத்துவிட்டாய், ஏனடி சிவசக்தி?

உலகலாவிய தொடர் நெறுக்குதல்கள் இந்திய அரசின் கண்களைத் திறக்குமா? தமிழ் நாடு துணிந்து குரல் கொடுக்குமா? இன்னும் பல முத்துக்குமார்கள் தீ குளித்து, பல ஆயிரம் அப்பாவி ஈழத் தமிழர்கள் மண்ணுக்கு உரமான பிறகுதான் ஐக்கிய நாடுகள் சபை திரும்பிப் பார்க்குமா? சொல்லடி சிவசக்தி.






மேலும் சேய்திகள் : மலேசியா கினி, திருத்தமிழ்
12:57 AM | Posted in

அன்பின் முத்துக்குமரா...

அந்த எரிபொருளுடன் நீ முடிவெடுத்து சென்றுகொண்டிருக்கையில் தமிழர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை செய்துகொண்டிருந்திருக்கக் கூடும். சிலர் அவர்களின் மேலதிகாரிகளின் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கூடும்.சிலர் தொலைக்காட்சிமுன்னும், சிலர் பெரியதிரைகள் முன்னும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கக் கூடும்.சிலர் தங்கள் துணை நலம் குறித்தும், சிலர் தங்கள் பணநலன் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடும்.சிலருக்கு தங்கள் எதிர்காலம் குறித்தும், பலருக்கு தங்கள் நிகழ்காலம் குறித்தும் கவலைகள் இருந்திருக்கக் கூடும்.சிலருக்கு உன்னைப் போலவே நம் இனம் அழிதல் கண்டு வெஞ்சினம் இருந்திருக்கக் கூடும்.ஒரு கணத்தில் உன் செயலால் எல்லார் சிந்தனையையும் ஒன்றாக்கி விட்டாயே சகோதரா!இந்த அரசியல்வியாதிகள் மீதும், வெற்றறிக்கைகள் மீதும் உனக்கிருந்த கோபம் புரிகிறது.வெக்கங்கெட்டு அரசியல் செய்யும் பலரும் சிரித்துக் கொண்டிருக்க, நீ மட்டும் கருகிப் போனாயே சகோதரா...என்ன செய்து உன்னை மீட்க?*****************************************************

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
பதிவுலக நண்பர்கள் இதை வெளியிடுங்கள். மற்ற நண்பர்கள் இதை மெயிலில் பரப்புங்கள். குறைந்த பட்சம் இதை முழுமையாகப் படியுங்கள்.


விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...
உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார்,

கொளத்தூர், சென்னை-99

(நன்றி : பரிசல்காரன் :
http://www.parisalkaaran.com/)
Category:
��
6:32 PM | Posted in ,
மு.கு : சற்று நீளமான பதிவுதான். மறுக்காமல் படிக்கவும்.

நாட்டையும் நாட்டின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் எழும் காலகட்டத்தில் நமது ஊடகங்கள் ஓரிரு நாட்களுக்கு அதனை ஒரு பக்கமாக ஊதிப் பெரிதாக்குவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் மலேசிய ஊடகங்களின் வழக்கமான வியாபார நாடகம் என்றால் அது மிகையாகாது.

அதில், நம் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் சமுதாயத் தொடர்புடைய தகவல்களை அல்லது உண்மை நிலவரங்களை வெளியிடும் முனைப்பு பாராட்டுக்குரியது. என்றாலும், அடுத்த நாளே இந்த நாளிதழ்கள் ஆளும் கட்சியினரின்; ஆதிக்கவாதிகளின் ஒருதலைபட்ச செய்திகளை முன்னுக்குப் பின்னாக அச்சிட்டு, எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் போக்கு, மலேசியத் தமிழரிடையே தமிழ் நாளிதழ்களை வெறுக்கும் மனப்பான்மையை அதிகரித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாளிதழ் உரிமையாளர்கள் இதற்கு காரணங்கள் பல கூறலாம். அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் முகாரி பாடுகின்றார்கள். ஆனால், இனம், மதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஏனைய செய்திகளையும் ஏன் இவர்கள் அச்சிட மறுக்கின்றனர் என்பதுதான் விளங்கவில்லை. மேடையில் அச்சமில்லை.. அச்சமில்லை என்று முழங்கிவிட்டு ஒரு சமுதாயத்திற்கு முதுகெலும்பாக, அறிவுக் கண்களாக விளங்க வேண்டிய சாதனத்தை சாக்கடையிலே மூழ்கடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்; ஊடகங்கள் இன்னும் எச்சில் சோற்றுக்குத் தவம் கிடக்கின்றன.

ஒரு நிகழ்வையோ அல்லது யாரோ ஒருவர் கூறும் செய்திகளை முழுமையாகவோ அல்லது தணிக்கை செய்து அச்சிடுதல் மட்டும் ஒரு நாளிதழின் கடமையன்று. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நாளிதழின் நிலைபாட்டை, ஆலோசனைகளை வாசகர்களுக்கு முன்வைக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, ஒரு விடயம் குறித்த நாளிதழ்களின் பொறுப்பாசிரியர் குழுவின் நிலைப்பாடு முடிந்த மட்டில் தவிற்க்கப்படுகிறது. பல உண்மைச் சம்பவங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களினால்தான் அச்சு ஊடக வாசகர்கள் மாற்று ஊடகங்களை நாடிச் செல்கின்றனர் எனும் மாபெரும் உண்மையை அவர்கள் இன்னும் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது.

சரி, குகனின் மரணத்திற்கும் நம் தமிழ் நாளிதழ்களை நான் சாடியதிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

மகிழுந்து (கார்) திருட்டை காரணம் காட்டி குகன் கைது செய்யப்பட்டார் என்பது பொதுவாக மலேசியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காவல் துறையினர் அறிவித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்திகளை தங்களுக்கே உரிய பாணியில் கக்கியிருந்தன. காவலில் வைக்கப்பட்ட குகன், இளைப்பு நோயால் மூச்சடைத்து இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார் அலந்தார். (அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதானே)

குகனுக்கு எந்த நோயும் இல்லை; காவல் துறையும் சேட்டு அமீது அலப்பாரும் பொய்யுரைக்கின்றனர் என்று குகனின் தாயார் ஆவேசப்பட்டார்.


மறுநாள், தேசிய கலவாடல் துறைத் தலைவர் மூசாங் அசான் தனது பங்குக்கு மருத்துவ உலகமே வியக்கும் புதியத் தகவலை வெளியிட்டார். குகன் தாகம் என்று தண்ணீர் கேட்டாராம்; காவல் அதிகாரி தண்ணீர் கொடுத்தாராம்; தண்ணீரைக் குடித்த குகனின் நுரையீறலில் கொஞ்சம் நீர் கோர்த்துக் கொள்ள, மூச்சடைத்து மரணம் அடைந்தாராம் ( இனி நீர் அருந்தும் போது கவனமுடன் இருக்கவும். உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் மாட்டிக்கொள்ளப் போகிறது- என்னக் கொடுமை சாமி இது).

இணையத்திலும் மின் மடல்களிலும் குகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் கொண்ட நிழற்படங்கள் காட்டுத் தீயாகப் பரவின. மக்கள் வெகுண்டெழுந்தனர். மாற்றுக் கட்சியினரும் இதை ஓர் இனப் பிரச்னை அல்ல, இது தேசிய பிரச்னை என்று முழங்கினர்.

திடீரென, தேசிய சட்ட ஒழுங்கீனத் தலைவர் கனி பெட்ட தையல் முதல் முறையாக நாயகன் வேடம் பூண்டார். குகனின் மரணம் ஒரு கொலை என்று வகைபடுத்தப்பட்டது.

காவல் துறை, அரசினரின் மறைமுக தடங்கல்களைத் தகர்த்து, குகனின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (அரசுக்கு அடங்கிய இடம்) இரண்டாவது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன் கிழமையன்று (28/01/2009) குகனின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 அளவில் பூச்சோங் 14-வது மைல் இந்தியர் இடுகாட்டில் முடிந்ததும் நீங்கள் அறிந்த ஒன்றே.



நானும் குகனின் இறுதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டேன். முற்பகல் 11.00 மணி அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சென்றடைந்த போது ஏறக்குறைய 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலதிற்காக காத்திருந்தனர். ஆனால், காவல் துறையினர், கலகத் தொடுப்பு துறையினர் (FRU), சாலை ஒழுங்கீன காவலர்கள் (Trafic) மற்றும் சீருடை தரிக்காத தருதலைகள் என 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் மோப்பமிட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 11.30. திடீரென்று ஓர் அதிகாரி எங்கள் முன் தோன்றி, 10 வினாடிகளில் எங்களைக் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். நாங்கள் குகனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பதாகக் கூறினோம். எங்கள் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆரஞ்சு சட்டையை அணிந்தவர்களை முதலில் பிடிக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. "இன்ராப்பைத்தானே தடை செய்திருக்கிறீர்கள் மக்கள் சக்தியை தடை செய்யவில்லையே" என்றோம். "மேலிடத்து உத்தரவு; ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்" என்று ஆணவத்தோடு கத்தினான் ஒருவன். நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர். (வாசகர்களே உங்கள் சீன நண்பர்களிடம் சீனப் புத்தாண்டுக்கு ஆரஞ்சு பழத்தை வாங்கி உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்களும் கைது செய்யப்படலாம்)

சற்று நேரத்தில் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கண்டதும் ஏனையோரை பிடிக்கும் படலம் நிறுத்தப்பட்டது. நான் இம்முறையும் தப்பித்தேன்.

அண்ணன் தனேந்திரன் வந்து அனுமதி கேட்டபோது அதிகாரி ஒருவனால் தள்ளிவிடப்பட்டார்; பின்னர் அவரும் அவருக்கு உதவிய பெரியவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.


(மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் போது நம் தமிழ் செய்தி சேகரிப்பாளர்களோடு மற்ற மொழி செய்தி சேகரிப்பாளர்களும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)



பிற்பகல் 1.30 மணியளவில் குகனின் உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட போது 2000-கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கலகப் படையினரின் பய உணர்வு உச்சிக்குச் சென்றது; விளைவு எங்கள் தலை உச்சியில் பெரிய பட்டாம் பூச்சி (அதாங்க எலிகப்டர்).

குகனின் சவம் சுபாங் செயாவை கடக்கும் போது 3000 மலேசியர்கள் (இனம், மதம் பாராது) திரண்டிருந்தனர். இடுகாட்டை அடைந்த போது அங்கும் 10 வண்டிகளில் கலகத் தொடுப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது வானம் சற்று அழுததால் எல்லா அதிகாரிகளும் வண்டிகளுக்குள்ளே 'அடக்கமானார்கள்'.



குகனின் உடல் மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த மனிதனுக்கும் காவல் துறையினரின் அத்துமீறிய மிருகத்தனத்தால் மரணம் நிகழக்கூடாது என்பதை நாம் தான் உறுதி செய்யவேண்டும்.

குகனின் மரணம் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

1. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் மாதக் கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். (நன்றி : ஓலைச்சுவடி)

2. குகன் சொகுசு மகிழுந்து கடத்தலில் ஈடுபட்டதால் விசாரனைக்காகத் தடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். சில கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு மகிழுந்துகள் மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிடங்குகளின் உரிமையாளர்களோ அல்லது தொடர்புடையவர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு வேளை, இதெல்லாம் பூமியிலிருந்து தானாக முளைத்த கிடங்குகளாக இருக்குமோ?

3. அப்படி காவல் துறையினரின் கூற்று உண்மையெனில் குகன் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றதல்லவா? பின் ஏன் குகனுக்கு மரணம்? காவல் துறை அல்லது ஆளும் கட்சியின் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் பொருட்டு குகன் பலியிடப்பட்டிருகலாம் என்ற எண்ணம் வலுக்கிறது.


4. திருடப்பட்டதாகக் கூறும் மகிழுந்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை காப்புறுதி முகவர்களோ-அதிகாரிகளோ, JPJ அதிகாரிகளோ யாரும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


5. உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார், குற்றவாளிகளை நாயகர்களாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒருவர் குற்றவாளி அல்ல நிரபராதியே என்று இந்த மொட்டைத் தலையனுக்குத் தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இவர் யாரைக் காப்பாற்ற முனைகிறார்?( ஓ.. உள்ளே இருந்தால்தானே வெளியில் ஏதும் முளைத்திட... ஏன் பாலைவனத்தில் புல் பூண்டுகள் முளைப்பதில்லை என்பதை இவர் தலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்)

ஒட்டு மொத்தமாக காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறவில்லை. சில மனித மிருகங்களின் கைப்பாவையாக மக்கள் காவலர்கள் மாறக்கூடாது என்பதே நமது எண்ணம்.

குகன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி தேவையில்லை. கெட்டவனாக இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறையினர் சட்டத்துறையின் வேலையைப் பார்க்கத் தேவையில்லை. சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்; நாட்டாமை தீர்ப்புகள் ஒடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான, நேர்த்தியான விசாரணைகள் மட்டுமே அரசு, காவல் துறை மற்றும் சட்டத் துறையின் மேல் படிந்த கலங்கத்தைப் போக்கும்.

ஊடகங்கள் நுணிப்புல்லை மேய்வதை விடுத்து சற்று தைரியமாக உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். இணையம், வலைப்பதிவர்களின் வருகையால் வாசகர்களை இழந்துவரும் அச்சு ஊடகத்தார், வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பசித்தவனுக்கு உணவுதான் தேவை; துணி மணிகள் அல்ல. வாசகர்கள் ஒட்டு மொத்தமாக இந்த ஊடகங்களை புறக்கணிப்பதற்கு முன் விழித்துக் கொள்வார்களா அதன் உரிமையாளர்கள்?
2:13 AM | Posted in

பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்..


மின் அஞ்சலை முடுக்கினால் பொங்கல் வாழ்த்துகள் வண்ண வண்ணக் காட்சிகளாக முண்டியடித்து வரிசையில் நிற்கின்றன. கைத்தொலைபேசியின் அலரலும் ஓய்ந்தபாடில்லை. எங்கும் பொங்கல் அலைகள். பொங்கல், பானையில் பொங்கும் முன்னே மனதில் பொங்கி வழிகிறது. அதிலும் குறிப்பாக ஆங்கில ஆண்டு 2009-ல் வரும் பொங்கலுக்கு மற்றுமொரு தனிச் சிறப்பும் உண்டு. இவ்வாண்டு தை முதல் நாள், " தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாள்" எனும் முழக்கத்தோடு நம்மை அரவணைக்க வருகிறது.



தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில், 1931-ஆம் ஆண்டில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தை மாதத்தின் முதல் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு என்று ஒருசேர மொழிந்தனர். அதோடு, தமிழ் ஆண்டை தமிழ்த்தாயின் தலைமகன் திருவள்ளுவரின் பொயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர். ஏசு கிருத்து பிறப்பிற்கு 31 ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவர் பிறந்திருக்கக்கூடும் என்றும் பல ஆதாரங்களின் துணை கொண்டு இறுதியிட்டனர். இங்கே, சிலருக்குக் கேள்விகள் எழக்கூடும்; அறிவியல் ஆதாரங்கள், தடையங்கள் இல்லாத சூழலில் இந்த முடிவை ஏற்றல் தகுமா? அறிவுடமையாகுமா? என்று. கிருத்துவ மதத்தினர் அய்யன் ஏசுவையும், இசுலாமியர் அன்னல் நபிகள் நாயகத்தையும், பொளத்தர்கள் அய்யன் புத்தரையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களது ஆண்டை கணக்கிடுகின்றனர். இந்தப் பொருமக்கள் இற்றை நாளில் பிறந்தார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றிதழ்கள் கொண்டா அவரவர் சமயங்களுக்கு அந்தச் சமயப் பெரியோர்களின் பெயர்களில் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கின்றன? மற்றுமொரு வழக்கத்தையும் நாம் இங்கே கவனித்தல் நலம் பயக்கும். நம் முன்னோர்கள் சமகால நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவுகளாகத் தொடுத்து வைக்கும் வழக்கம் இன்றி வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், தமிழர்களின் சமகால நிகழ்வுகளை கவிதைகள், செய்யுள்கள் மற்றும் பாடல்கள் வாயிலாகப் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதையும் நாம் மறக்கலாகாது. இலக்கணம், மருத்துவம், வேளாண்மை, சரித்திரம் என்று எல்லாவகை அறிவுடமை சொத்துக்களெல்லாம் கவிதைக்குள்ளும் பாடல்களுக்குள்ளும் அடக்கம். ஆகவே, அன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் விரிவான ஆய்விற்குப் பின்னரே தங்கள் முடிவுகளை அறிவித்திருக்கக்கூடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


அரை நூற்றாண்டு கடந்த பின்னரே 1971ல் கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவராண்டு முறை அரசு நாட்குறிப்பில் இடம் பெற்றது. புரட்சித் தலைவர் ராமச்சந்திரன் அவர்களால் 1981-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு சாசனத்த்தில் சட்டமாக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் சிறப்பு பெற்றிருக்கின்றது. இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் மகிழ்வைத் தந்தாலும், முழுக்க முழுக்கத் தமிழர்களே வாழும் தமிழ்த்திரு மண்ணில் மொழி நலம் பேனும் சட்டம் நடைமுறைப்படுத்த 78 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றதை நினைக்கும்போது மனம் சற்றே சஞ்சலப்படுகின்றது.


மலேசியாவைப் பொறுத்தமட்டில், தைப் பொங்கலைக் கொண்டாடும் பெரும் பகுதி தமிழர்கள், இத்திருநாளை மூன்றாம் தர பண்டிகையாகத்தான் கொண்டாடுகின்றார்கள். மலேசிய மண்ணில் வாழும் இந்திய வழித் தோன்றல்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தும், ஆரிய வழி தீபத் திருநாளுக்கு பொது விடுப்பு கொடுக்கப்பட்டதும், பொங்கல் திருநாளுக்கு பொது விடுப்பு மறுக்கப்பட்டதும்தான் காரணம் எனத் தோன்றுகிறது. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் தீபாவளி நயவஞ்சகமாகத் தினிக்கப்பட்டதை முதலில் நாம் உணர வேண்டும். காரணம், மலேசிய சட்டங்கள் இயற்றப்பட்ட காலக்கட்டத்தில், தமிழர்கள் அல்லாதவர்களே அரசியலமைப்பு - சட்ட ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். அதனால், அவர்களின் கலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். தமிழர்கள், தமிழர் கலை, கலாச்சாரம், மரபுகள் நாசுக்காக அழிக்கப்படுகின்றது என்பதைக்கூட உணராதவர்களாக, எது தமிழர் கலை, கலாச்சாரம் என்பதையும் அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயம் பாமறச் சமுதாயமாக, கல்வியறிவு குன்றிய சமுதாயமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த காரணத்தால் தொலைத்த அடையாளங்கள் அதிகம். ஆனால், இன்றைய சூழ்நிலை வேறு. இழந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை; மீட்டெடுக்கும் கடமையை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. துனிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தமிழா!!!





தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்பத்தன்று நூறன்று பன்னூ றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
��