6:32 PM | Posted in ,
மு.கு : சற்று நீளமான பதிவுதான். மறுக்காமல் படிக்கவும்.

நாட்டையும் நாட்டின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் எழும் காலகட்டத்தில் நமது ஊடகங்கள் ஓரிரு நாட்களுக்கு அதனை ஒரு பக்கமாக ஊதிப் பெரிதாக்குவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் மலேசிய ஊடகங்களின் வழக்கமான வியாபார நாடகம் என்றால் அது மிகையாகாது.

அதில், நம் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் சமுதாயத் தொடர்புடைய தகவல்களை அல்லது உண்மை நிலவரங்களை வெளியிடும் முனைப்பு பாராட்டுக்குரியது. என்றாலும், அடுத்த நாளே இந்த நாளிதழ்கள் ஆளும் கட்சியினரின்; ஆதிக்கவாதிகளின் ஒருதலைபட்ச செய்திகளை முன்னுக்குப் பின்னாக அச்சிட்டு, எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் போக்கு, மலேசியத் தமிழரிடையே தமிழ் நாளிதழ்களை வெறுக்கும் மனப்பான்மையை அதிகரித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாளிதழ் உரிமையாளர்கள் இதற்கு காரணங்கள் பல கூறலாம். அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் முகாரி பாடுகின்றார்கள். ஆனால், இனம், மதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஏனைய செய்திகளையும் ஏன் இவர்கள் அச்சிட மறுக்கின்றனர் என்பதுதான் விளங்கவில்லை. மேடையில் அச்சமில்லை.. அச்சமில்லை என்று முழங்கிவிட்டு ஒரு சமுதாயத்திற்கு முதுகெலும்பாக, அறிவுக் கண்களாக விளங்க வேண்டிய சாதனத்தை சாக்கடையிலே மூழ்கடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்; ஊடகங்கள் இன்னும் எச்சில் சோற்றுக்குத் தவம் கிடக்கின்றன.

ஒரு நிகழ்வையோ அல்லது யாரோ ஒருவர் கூறும் செய்திகளை முழுமையாகவோ அல்லது தணிக்கை செய்து அச்சிடுதல் மட்டும் ஒரு நாளிதழின் கடமையன்று. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நாளிதழின் நிலைபாட்டை, ஆலோசனைகளை வாசகர்களுக்கு முன்வைக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, ஒரு விடயம் குறித்த நாளிதழ்களின் பொறுப்பாசிரியர் குழுவின் நிலைப்பாடு முடிந்த மட்டில் தவிற்க்கப்படுகிறது. பல உண்மைச் சம்பவங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களினால்தான் அச்சு ஊடக வாசகர்கள் மாற்று ஊடகங்களை நாடிச் செல்கின்றனர் எனும் மாபெரும் உண்மையை அவர்கள் இன்னும் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது.

சரி, குகனின் மரணத்திற்கும் நம் தமிழ் நாளிதழ்களை நான் சாடியதிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

மகிழுந்து (கார்) திருட்டை காரணம் காட்டி குகன் கைது செய்யப்பட்டார் என்பது பொதுவாக மலேசியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காவல் துறையினர் அறிவித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்திகளை தங்களுக்கே உரிய பாணியில் கக்கியிருந்தன. காவலில் வைக்கப்பட்ட குகன், இளைப்பு நோயால் மூச்சடைத்து இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார் அலந்தார். (அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதானே)

குகனுக்கு எந்த நோயும் இல்லை; காவல் துறையும் சேட்டு அமீது அலப்பாரும் பொய்யுரைக்கின்றனர் என்று குகனின் தாயார் ஆவேசப்பட்டார்.


மறுநாள், தேசிய கலவாடல் துறைத் தலைவர் மூசாங் அசான் தனது பங்குக்கு மருத்துவ உலகமே வியக்கும் புதியத் தகவலை வெளியிட்டார். குகன் தாகம் என்று தண்ணீர் கேட்டாராம்; காவல் அதிகாரி தண்ணீர் கொடுத்தாராம்; தண்ணீரைக் குடித்த குகனின் நுரையீறலில் கொஞ்சம் நீர் கோர்த்துக் கொள்ள, மூச்சடைத்து மரணம் அடைந்தாராம் ( இனி நீர் அருந்தும் போது கவனமுடன் இருக்கவும். உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் மாட்டிக்கொள்ளப் போகிறது- என்னக் கொடுமை சாமி இது).

இணையத்திலும் மின் மடல்களிலும் குகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் கொண்ட நிழற்படங்கள் காட்டுத் தீயாகப் பரவின. மக்கள் வெகுண்டெழுந்தனர். மாற்றுக் கட்சியினரும் இதை ஓர் இனப் பிரச்னை அல்ல, இது தேசிய பிரச்னை என்று முழங்கினர்.

திடீரென, தேசிய சட்ட ஒழுங்கீனத் தலைவர் கனி பெட்ட தையல் முதல் முறையாக நாயகன் வேடம் பூண்டார். குகனின் மரணம் ஒரு கொலை என்று வகைபடுத்தப்பட்டது.

காவல் துறை, அரசினரின் மறைமுக தடங்கல்களைத் தகர்த்து, குகனின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (அரசுக்கு அடங்கிய இடம்) இரண்டாவது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன் கிழமையன்று (28/01/2009) குகனின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 அளவில் பூச்சோங் 14-வது மைல் இந்தியர் இடுகாட்டில் முடிந்ததும் நீங்கள் அறிந்த ஒன்றே.



நானும் குகனின் இறுதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டேன். முற்பகல் 11.00 மணி அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சென்றடைந்த போது ஏறக்குறைய 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலதிற்காக காத்திருந்தனர். ஆனால், காவல் துறையினர், கலகத் தொடுப்பு துறையினர் (FRU), சாலை ஒழுங்கீன காவலர்கள் (Trafic) மற்றும் சீருடை தரிக்காத தருதலைகள் என 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் மோப்பமிட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 11.30. திடீரென்று ஓர் அதிகாரி எங்கள் முன் தோன்றி, 10 வினாடிகளில் எங்களைக் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். நாங்கள் குகனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பதாகக் கூறினோம். எங்கள் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆரஞ்சு சட்டையை அணிந்தவர்களை முதலில் பிடிக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. "இன்ராப்பைத்தானே தடை செய்திருக்கிறீர்கள் மக்கள் சக்தியை தடை செய்யவில்லையே" என்றோம். "மேலிடத்து உத்தரவு; ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்" என்று ஆணவத்தோடு கத்தினான் ஒருவன். நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர். (வாசகர்களே உங்கள் சீன நண்பர்களிடம் சீனப் புத்தாண்டுக்கு ஆரஞ்சு பழத்தை வாங்கி உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்களும் கைது செய்யப்படலாம்)

சற்று நேரத்தில் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கண்டதும் ஏனையோரை பிடிக்கும் படலம் நிறுத்தப்பட்டது. நான் இம்முறையும் தப்பித்தேன்.

அண்ணன் தனேந்திரன் வந்து அனுமதி கேட்டபோது அதிகாரி ஒருவனால் தள்ளிவிடப்பட்டார்; பின்னர் அவரும் அவருக்கு உதவிய பெரியவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.


(மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் போது நம் தமிழ் செய்தி சேகரிப்பாளர்களோடு மற்ற மொழி செய்தி சேகரிப்பாளர்களும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)



பிற்பகல் 1.30 மணியளவில் குகனின் உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட போது 2000-கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கலகப் படையினரின் பய உணர்வு உச்சிக்குச் சென்றது; விளைவு எங்கள் தலை உச்சியில் பெரிய பட்டாம் பூச்சி (அதாங்க எலிகப்டர்).

குகனின் சவம் சுபாங் செயாவை கடக்கும் போது 3000 மலேசியர்கள் (இனம், மதம் பாராது) திரண்டிருந்தனர். இடுகாட்டை அடைந்த போது அங்கும் 10 வண்டிகளில் கலகத் தொடுப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது வானம் சற்று அழுததால் எல்லா அதிகாரிகளும் வண்டிகளுக்குள்ளே 'அடக்கமானார்கள்'.



குகனின் உடல் மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த மனிதனுக்கும் காவல் துறையினரின் அத்துமீறிய மிருகத்தனத்தால் மரணம் நிகழக்கூடாது என்பதை நாம் தான் உறுதி செய்யவேண்டும்.

குகனின் மரணம் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

1. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் மாதக் கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். (நன்றி : ஓலைச்சுவடி)

2. குகன் சொகுசு மகிழுந்து கடத்தலில் ஈடுபட்டதால் விசாரனைக்காகத் தடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். சில கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு மகிழுந்துகள் மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிடங்குகளின் உரிமையாளர்களோ அல்லது தொடர்புடையவர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு வேளை, இதெல்லாம் பூமியிலிருந்து தானாக முளைத்த கிடங்குகளாக இருக்குமோ?

3. அப்படி காவல் துறையினரின் கூற்று உண்மையெனில் குகன் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றதல்லவா? பின் ஏன் குகனுக்கு மரணம்? காவல் துறை அல்லது ஆளும் கட்சியின் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் பொருட்டு குகன் பலியிடப்பட்டிருகலாம் என்ற எண்ணம் வலுக்கிறது.


4. திருடப்பட்டதாகக் கூறும் மகிழுந்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை காப்புறுதி முகவர்களோ-அதிகாரிகளோ, JPJ அதிகாரிகளோ யாரும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


5. உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார், குற்றவாளிகளை நாயகர்களாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒருவர் குற்றவாளி அல்ல நிரபராதியே என்று இந்த மொட்டைத் தலையனுக்குத் தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இவர் யாரைக் காப்பாற்ற முனைகிறார்?( ஓ.. உள்ளே இருந்தால்தானே வெளியில் ஏதும் முளைத்திட... ஏன் பாலைவனத்தில் புல் பூண்டுகள் முளைப்பதில்லை என்பதை இவர் தலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்)

ஒட்டு மொத்தமாக காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறவில்லை. சில மனித மிருகங்களின் கைப்பாவையாக மக்கள் காவலர்கள் மாறக்கூடாது என்பதே நமது எண்ணம்.

குகன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி தேவையில்லை. கெட்டவனாக இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறையினர் சட்டத்துறையின் வேலையைப் பார்க்கத் தேவையில்லை. சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்; நாட்டாமை தீர்ப்புகள் ஒடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான, நேர்த்தியான விசாரணைகள் மட்டுமே அரசு, காவல் துறை மற்றும் சட்டத் துறையின் மேல் படிந்த கலங்கத்தைப் போக்கும்.

ஊடகங்கள் நுணிப்புல்லை மேய்வதை விடுத்து சற்று தைரியமாக உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். இணையம், வலைப்பதிவர்களின் வருகையால் வாசகர்களை இழந்துவரும் அச்சு ஊடகத்தார், வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பசித்தவனுக்கு உணவுதான் தேவை; துணி மணிகள் அல்ல. வாசகர்கள் ஒட்டு மொத்தமாக இந்த ஊடகங்களை புறக்கணிப்பதற்கு முன் விழித்துக் கொள்வார்களா அதன் உரிமையாளர்கள்?

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

தைரியமாகவும் வெளிப்படையாகவும் நீங்கள் சொல்லி இருக்கும் சில விடயங்கள் யோசிக்க வைக்கின்றன... இதற்கான பதில் இன்னும் ஒரு சில நாட்களில் எப்படி வெளிப்படுகின்றன என்பதைக் காண்போம்.

A N A N T H E N said...

நிறைய விசயங்கள அலசி சொல்லி இருக்கிங்க...

காரசாரமா எழுதி இருந்தாலும், நமட்டு கிண்டலுக்கும் பஞ்சமில்லை.

//சற்று நீளமான பதிவுதான். மறுக்காமல் படிக்கவும்.//

சற்று??? ரொம்ப நீளமய்யா

//ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்" //

அடடே இன்னைக்கு ஆரஞ்சுல ஒரு டீசட்டை போட்டுட்டு வந்திருக்கேனே :(


//அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதான//

இதெல்லாம் வெளியில சொல்லலாங்களா? நாட்டு ரகசியமாக்கும்

//நான் இம்முறையும் தப்பித்தேன்.//

அண்ணே எஸ்கேப்பா?

//சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்//

குகனின் மரணம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தனும், என்ன செய்வது... ஏதும் வந்த பிறகே அதைப் பற்றி சிந்திக்கிறோம் என்பது கசப்பான உண்மை....

(ஒரு சின்ன பரிந்துரை: சிவப்பு நிற எழுத்துரு கண்களுக்கு சிரமத்தைத் தருவதாக உணர்கிறேன்... இப்போக்கூட உங்க பதிவை, MSWORDக்கு மாற்றி பிறகுதான் படித்தேன், எண்ணிப் பார்க்கலாமே)

malar said...

தெளிவான துணிச்சலான அலசல் நிறைந்த எழுத்து...
சிந்திக்க செய்கிறது...அருமை :)

குமரன் மாரிமுத்து said...

அய்யா விக்கி அவர்களே..

வெளியில் கொட்ட முடியாத செய்திகள் பல உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டுகிறேன். நன்றி.


அனந்தன் பையா..

உங்கள் பார்வை என் எழுத்துக்களைத் தழுவியதற்கு நன்றி.

உங்கள் 'சின்ன பரிந்துரை' பரிசீலிக்கப்பட்டது. மாற்றம் செய்துள்ளேன்.

மேலும் என்னைத் திருத்துக...


மலர்விழுயாரே, நன்றி.

//தெளிவான துணிச்சலான அலசல் நிறைந்த எழுத்து...
சிந்திக்க செய்கிறது//

நாளிதழ்களை நம்பி நாசமாய் போய்கொண்டிருக்கும் சமுதாயத்தை நெறிபடுத்தும் கடமை நம்மைப் போன்ற வலைப்பதிவர்களுகு அதிகம் இருப்பதாக உணர்கிறேன். வாருங்களேன் எல்லோரும் இணைந்தே அதைச் செய்வோம்.