பகுதி 2


3. வாழ்விடம்


அட்டைகள் வெப்பநிலை கொண்ட பகுதிகளில் மிகுந்து காணப்படுகின்றன. ஆயினும், அவை சூரிய ஒளியை நேசிப்பதில்லை. நேரடி சூரிய ஒளிக்கதிர்கள் மேனியைத் தழுவாதிருக்கும் பொருட்டு கற்கள், பாறை இடுக்குகள், செடி கொடிகள், வேர்கள் என்று மறைவிடத்தை நாடி வாழ்கின்றன. சுறுங்கச் சொன்னால், அட்டைகள் வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த இடங்களில் வாழக்கூடியன.



பொதுவாக, வெளிச்சம் குறைந்த அல்லது இருள் படர்ந்த நீர் பகுதிகளில் அட்டைகள் அதிகம் காணப்படும். அட்டைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டன. எனினும், தேங்கி இருக்கும் நீரே அட்டைகளுக்கு உகந்ததாகும். காரணம் ஓடும் நீரில் எதிர்நீச்சல் போடும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. ஆழமான நீர்நிலைகளிலும் அட்டைகள் வசிப்பதில்லை. காரணம் தேங்கி இருக்கும் நீரின் மேற்பகுதியில் மட்டுமே சுவாசத்திற்குத் தேவையான பிராணவாயு அதிகம் இருக்கும். குளோரின் அதிகம் கொண்ட நீரிலும் அட்டைகள் வாழாது. நீருக்கு வெளியே வரும் அட்டைகள், தன் உடலின் தோல் பரப்பில் உள்ள சுவாசத் துவாரங்களின் துணைகொண்டு சுவாசிக்கின்றன.


அட்டைகள் சத்தம் கொண்ட சூழ்நிலையை வெறுக்கின்றன. அதிக சத்தம் அட்டைகளின் இனப் பெருக்கத்திற்கும் தடையாக அமையும்.



ஆக மொத்தத்தில், உண்பதையும் இனபெருக்கம் செய்வதையுமே வேலையாகக் கொண்டு பிற உயிர்களை அண்டி வாழும் அட்டைகள் மட்டுமல்ல அவ்வாறான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்த மனிதர்களும் கூனிக் குறுகி, மறைந்து ஒளிந்து வாழ்க்கையை ஓட்ட வேண்டியதாயிருக்கும்.



4. உணவு




அட்டைகளின் முக்கிய உணவு உயிரினங்களின் குருதியே. ஒரு சில நீர் தாவரங்களின் இலைகளையும் அவ்வப்போது உண்ணும் பழக்கம் அட்டைகளுக்கு உண்டு.



உயிரினங்களில் மேலான உயிரினம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதன் உமிழ்நீரைத் துப்பினால் உலகப் போரே வெடித்துவிடும். ஆனால், அற்பமாகக் கருதும் அட்டையின் உமிழ்நீருக்கு இன்று மருத்துவ உலகமே சிவப்பு கம்பளம் விரிக்கின்றது.



அட்டைகளுக்கு மூன்று பல் தொகுதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் நூறு சிறு பற்கள் வீதம் மொத்தம் முன்னூறு பற்கள் இருக்கின்றன. அட்டைகள் இந்தப் பற்களின் துணை கொண்டு மற்ற உயிரினங்களின் தோல் பகுதியை முதலில் கடித்து துவாரமிடுகின்றன. பின்னர், தேக்கி வைத்திருக்கும் உமிழ்நீரை துப்புகின்றன. உமிழ்நீரில் கலந்திருக்கும் Hirudin எனும் Enzime குருதியை எளிதாக உறிவதற்கு ஏற்றவரையில் மேலும் இலகுவாக்குகின்றது.



ஏறக்குறைய 10 நிமிடங்களிலிருந்து 120 நிமிடங்கள் வரை அவை உணவருந்தும். தான் உறிந்த குருதியின் கணம் தாங்காமல் பற்களை விடுவித்துக் கொண்டு அவை கீழே விழுந்துவிடுகின்றன. ஒரு முறை வயிறுமுட்ட குருதியை உறிஞ்சிய அட்டைக்கு அடுத்த ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை உணவுத் தேவை இருக்காது.


அட்டை வளர்ப்பை தொழிலாகச் செய்ய நினைப்பவர்கள், விலாங்கு மீனையும் மயிரை மீனையும் அட்டைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். காரணம், இவ்விரண்டு வகை மீன்களுக்கும் செதில் இல்லை; எளிதில் கிடைக்கக்கூடியது; செலவுகள் குறைவு. உயிரோடு இருக்கின்ற மீன்களை வாங்கி கம்பிக் கூண்டிலிட்டு அட்டை தொட்டிகளில் வைக்கலாம். மீன்கள் வைக்கப்படும் இந்த கம்பிக் கூண்டுகள் சரிபாதி மட்டுமே நீரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மீன்களின் உடலில் இருக்கும் குருதி உறிஞ்சப்பட்டுவிட்டால், மீன்களின் உடல் வெளுத்து காணப்படும். குருதி வெளியாக்கப்பட்ட மீன்கள் இறப்பதற்கு முன்னதாக அப்புறப்படுத்தப்பட வெண்டும்.





5. வளர்ப்பு தொட்டிகள்





அட்டைகளை மூன்று வழிமுறைகளில் வளர்க்கலாம்.





1). நீர் தேக்கங்கள்/குளங்கள் - இந்த முறை பெரிய பொருட்செலவில் அதிக எண்ணிக்கையில் (பல ஆயிரம்) அட்டைகளை வளர்ப்பதாகும்.








2). சிமெண்ட் தொட்டிகள் - இந்த முறை குறைந்த பொருட்செலவில் சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். இந்த சிமெண்ட் தொட்டிகள், வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் வராத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். சொந்த அல்லது வாடகை நிலங்களில் இந்த முறையை பயன்படுத்தலாம்.







3). நீர் தொட்டிகள் - இந்த முறை மிகக் குறைந்த பொருட்செலவில் சில நூறிலிருந்து சில ஆயிரம் அட்டைகளை வளர்ப்பதாகும். நமது வீடுகளில் நீரை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் அதே கருப்பு நிறம் கொண்ட Poly Tank தான் இந்த தொட்டிகள். ஒவ்வொரு தொட்டிகளிலும் 500-லிருந்து 700 அட்டைகள் வரை வளர்க்கலாம். இது மிகவும் எளிய முறையாதலால் சிறு தொழிலாக அட்டை வளர்ப்பை தொடங்குகின்றவர்களில் பெரும்பான்மையினர் இம்முறையையே பயன்படுத்துகின்றனர். வளர்க்கப்படும் அட்டைகள் வெளியில் 'உல்லாச உலா' செல்லாதவாறு இந்தத் தொட்டிகளின் மேற்பகுதியில் சல்லடைக் கம்பிகள் பொறுத்தப்பட்டிருக்கும்.






தொடரும்....


பி. கு: தயவு கூர்ந்து Enzime, சிமெண்ட், Poly Tank ஆகியவற்றுக்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.



பகுதி 3


6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து




8 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

சுவாரசியமாக தொகுத்தளித்து இருக்கிறீர்கள்... அட்டைக் கடித்தால் வலிக்குமா வலிக்காதா? :)) சில அட்டைகள் கடித்தால் மனிதன் உயிர் விடக்கூடும் என்கிறார்கள்... கேள்விபட்டதுண்டா?

குமரன் மாரிமுத்து said...

எம்மை உரசிச் சென்றமைக்கு நன்றி.

அட்டை கடித்தால் மெல்லிய வலி உண்டாகும். நேரம் இருந்தால் எம்மை வந்து பாருங்கள். இரண்டு அட்டைகளை உங்கள் மேலிட்டு அனுபவப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன்.

//சில அட்டைகள் கடித்தால் மனிதன் உயிர் விடக்கூடும் என்கிறார்கள்... கேள்விபட்டதுண்டா?//

இது நிச்சயம் MIC / UMNO -விலிருக்கும் மனித அட்டைகளாகத்தான் இருக்கும்.

இந்த அட்டைகளுக்குப் பயந்து மாடப்புறாவை விரட்டி அடிக்காதீர்கள் அய்யா....

Sathis Kumar said...

மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி...

குமரன் மாரிமுத்து said...

சதீசு அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி. மீண்டும் மீண்டும் நம்ம கடைக்கு வந்துட்டு போங்க...

Anonymous said...

Enzime - நொதி / நொதியம்

குமரன் மாரிமுத்து said...

இனியவள் புனிதாவுக்கு நன்றி.

மீண்டும் வருக....

ரவி said...

இதற்கான மார்க்கெட் எங்குள்ளது ? யார் இதை வாங்குவார்கள் என்றும் தெரிவித்தால் நலம்...

குமரன் மாரிமுத்து said...

நன்றிங்க செந்தழல் ரவி.

தங்களின் விண்ணப்பம் பகுதி -3 -ல் பூர்த்தியாகும்.

பகுதி 3
6.பயன்பாடு 7.பொருளியல் ஆய்வு 8.எனது கருத்து

பகுதி 3, இவ்வாரப் பிற்பகுதியில் பதிவு செய்யப்படும். மீண்டும் வருக.